search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெல்மெட் சட்டம்"

    மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணியவேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. #Helmet #HighCourt #TamilNadu
    சென்னை:

    மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். காரில் செல்பவர்கள் ‘சீட் பெல்ட்’ கண்டிப்பாக அணியவேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்டத்தை தீவிரமாக தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் கண்டிப்பாக அணியவேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்த தமிழக போலீசாருக்கு உத்தரவிட்டனர்.



    ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும், மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான விவரங்கள் எதுவும் இல்லை.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து சென்றாலும், அவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும்’ என்று கூறினர். அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல், ‘இதை படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’ என்றார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று மீண்டும் உத்தரவிட்டனர்.

    இதுதொடர்பான அறிக்கையை வருகிற நவம்பர் 9-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். விசாரணையை நவம்பர் 9-ந் தேதி தள்ளிவைத்தனர். 
    அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தலைநகராக உள்ள சண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. #helmet
    புதுடெல்லி:

    பிறநாடுகளின் காலனி பகுதிகளாக  நமது நாட்டில் உள்ள டெல்லி, கோவா, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபர் தீவுகள் மற்றும் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தலைநகராக உள்ள சண்டிகர் நகரம் உள்ளிட்ட பகுதிகள் யூனியன் பிரதேசம் என்றழைக்கப்படுகின்றன.

    மத்திய அரசின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட இப்பகுதிகளுக்கென சில சிறப்பு அதிகாரங்களும், சட்டங்களும், சலுகைகளும் உள்ளன. அவ்வகையில், டெல்லிக்குட்பட்ட பகுதிகளுக்கான மோட்டார் வாகன சட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

    இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் பெண்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமல்ல, விருப்பப்பட்டால் பாதுகாப்பு கருதி அவர்களின் தேர்வுக்கேற்ப ஹெல்மெட் அணிந்து செல்லலாம் என 1993-ம் ஆண்டில் இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் துணை விதி 115-ல் திருத்தம் செய்யப்பட்டது.

    பின்னர்,கடந்த 28-8-2014 அன்று இதே விதியில் மீண்டும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. ‘பெண்கள்’ என்று இருந்த சொல் ‘சீக்கிய பெண்கள்’ என்று மாற்றப்பட்டு, இந்த திருத்தமும் ஒப்புதல் பெறப்பட்டது.



    இதன்படி, நாட்டின் தலைநகரான டெல்லியில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் சீக்கிய பெண்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமல்ல, பாதுகாப்பு கருதி அவர்களின் தேர்வுக்கேற்ப விருப்பப்பட்டால் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், யூனியன் பிரதேசம் ஆளுமைக்கு உட்பட்ட சண்டிகர் நகருக்கும் இந்த விதி பொருந்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் தீர்மானித்தது. இதுதொடர்பான அறிவிப்பு சண்டிகர் நகர நிர்வாகத்துக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் டெல்லியில் உள்ளதுபோல் இனி சண்டிகர் நகரிலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

    இருசக்கர வாகனங்களை ஓட்டும், பின்னால் அமர்ந்து செல்லும் சீக்கிய ஆண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல என்னும் நடைமுறை ஏற்கனவே நாடு முழுவதும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×